எச்சென்ம பாவமிது
இப்போது வந்தது கழுவறுக்க..
இருட்டறைந்த அந்நேரத்தில்..
கொலையா தற்கொலையா என
அசிரிரி பிடரியிலறைந்தது..
மரணம் எக்காளமிட்டபடி
என்னெதிரே கால் நீட்டி அமர்ந்து புன்முறுவியது ..
இம்முறை விழுங்க இயன்ற மூச்சு மறுமுறைக்கு இரைத்து நின்றது..
விடை இல்லா கேள்வியுடனும்
கொடுவாளுடனும் வேதாளம்
என் முதுகேறியது..
ஆம் பள்ளி சென்ற எம்மகள்
கர்ப்பமாய் வீடு திரும்பிய போது..
மழலை நெடி மறையா
அவள் வார்த்தையில்
அவளே சொல்ல
நான் கேட்டபோது..
என் செய்வதெனயறியாது
திக்கற்று நிற்கையில்
என் செய் என
ஒளி காட்டினாள் அவள்
க்ஷணத்தில் என்னுள்ளிறங்கி
என்மகளை காத்தாள் அவள்..
செயல் எனதெனினும்
அக்கணம் நான் முழு யட்சியே..
என் மகளும் அவ்வாறே அன்றெனை பார்த்திருப்பாள்..
கழுத்தருகே வந்த கொடுவாள் மாயமாய் மறைந்ததாய் நினைவு..
சிறு திரியாய் என் மகள் மீண்டும்
உயிர்பெற அவளே காரணம்..
No comments:
Post a Comment